Photo Courtesy : amazon.in நீ இன்றி நானில்லை, சொல்லின்றி மொழி இல்லை, நிறம் இன்றி மணம் இருந்தால், பூ கூட அழகில்லை, நீ இன்றி நான் இருந்தால், எனக்கென்றும் சிறப்பில்லை, உனை பற்றி எழுதும் கவி, உண்மை அன்றி வேறில்லை. இதழ் என்னும் சிப்பிக்குள், மறைத்து வைத்த முத்தெனவே, நீ உதிர்க்கும் புன்னகையை, நான் என்றும் போற்றிடுவேன், முத்துக்கள் சிதறிடவே, மொழி என்றும் நான் உரைப்பேன், புன்னகையில் உன் அழகை, மனத்தினிலே பூட்டிடுவேன். மெய் எழுத்தாய் நீ வந்தாய், நெற்றியிலே பொட்டிட்டு, உயிர் எழுத்தாய் நான் வந்தேன், என்னுயிர் நீ என்று, மெய்யாக உயிர் தந்தாய், நம் காதல் வாழ்வதற்கு, தமிழ் என்றும் போற்றிடுமே, நம் காதல் கவி என்று.